பொதுத்துறை வங்கிகளில் ரூ.17,947.11 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 51 பேர் வெளிநாடு தப்பி ஓடியதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, வங்கி மோசடி ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அனுராக் சிங் தாக்கூர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு தப்பி ஓடியதாகவும், அவர்கள் 17 ,947.11 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கூறினார்.
சிபிஐ அறிக்கையின் படி, இந்த 66 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மொத்தம் 17,947.11 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பான வழிமுறைகளில் வெளி நாட்டுக்கு தப்பியோடியதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக தப்பியோடியதாக கூறப்படும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018ன் கீழ் 10 தனி நபர்கள் மீது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை திரும்ப அழைத்து வருவதற்கான ஒப்படைப்பு கோரிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக, சிபிஐ இதுபோன்ற இரண்டு கோரிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு ஜூலை மாதம் அனுப்பியதாகவும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது வரை பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ஆக இதுவரை 694 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இதில் 13 பேர் இதுவரை தண்டனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. . பொருளாதார குற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இரண்டு பேரை நாடு கடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று 8 பேரை நாடு கடத்துவதற்கான உத்தரவை இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது.